திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, உலகமே வியக்கும் வண்ணம் நடந்து முடிந்தது. இதில் 98 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை நிகழாத ஒரு மகத்தான சாதனையை ஒளிப்பதிவாளர் ஆட்டம் டுரல்ட் ஆர்க்பாவ் (Autumn Durald Arkapaw) நிகழ்த்தியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவுக்கான பிரிவில் ஆஸ்கர் விருது பெறும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) திரைப்படத்தில் அவர் காட்டிய ஒளிப்பதிவு மாயாஜாலத்திற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட ஆட்டம் டுரல்ட் ஆர்க்பாவ் மேடையில் பேசியதாவது, “இந்த வெற்றி எனக்கு மட்டும் உரித்தானது அல்ல. திரைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் அனைத்துப் பெண்களுக்கும், எனக்கு ஊக்கமாக இருந்தவர்களுக்கும் இத்தனைச் சமர்ப்பிக்கிறேன். தடைகளை உடைக்க முடியும் என்பதற்கு இதுவே சாட்சி.”
‘சின்னர்ஸ்’ படத்தில் ஆட்டம் டுரல்ட் கையாண்ட கேமரா கோணங்களும், ஒளியமைப்பும் படத்திற்கு ஒரு தனித்துவமான உயிரோட்டத்தைக் கொடுத்திருந்தன. குறிப்பாக இருள் மற்றும் ஒளியின் விளையாட்டை அவர் கையாண்ட விதம் உலகத் தரம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இவர் ஏற்கனவே ‘லோகி’ (Loki) தொடர் மற்றும் ‘பிளாக் பான்தர்: வகாண்டா ஃபாரெவர்’ போன்ற பிரம்மாண்ட படைப்புகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
