தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பதை தடுக்க தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், ஆன்லைனில் பணப்பட்டுவாடா நடப்பதை கண்காணிக்க 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இந்தநிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகம் முழுவது 2,106 பறக்கும் படை, கண்காணிப்புக் குழுக்கள் சோதனையைத் தொடங்கியுள்ளன என்றார்.
பொதுமக்கள் கொண்டு செல்லும் பணம், பொருள்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். சோனையின்போது, உரிய ஆவணங்கள் இருந்தால் பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.
மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் அதிக எண்ணிக்கையில் பணம் பரிவர்த்தனை நடந்தால் அவை கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும் என்று கூறினார். தேர்தல் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ஏஐ தொழில்நுட்ப மூலம் வெளியிடப்படும் வீடியோவை கண்காணித்து வருகிறோம்.
தமிழகம் முழுவதும் இதுவரை 1.26 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தேர்தல் பணிக்காக 50 கம்பெனி துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை பிரசாரம் மேற்கொள்ளலாம். பிரசாரத்திற்கு அனுமதி பெறுவதற்கு முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிரசாரம் செய்பவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பிரச்சாரத்தின் போது, 5 ஆயிரத்திற்கு மேல் கூடினால் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த அறிவுறுத்தப்படும்.

