வடகொரியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், அதிபர் கிம் ஜாங் உன்னின் ஆளும் ‘தொழிலாளர் கட்சி’ (Workers’ Party of Korea) தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
நாட்டின் 15-வது உச்ச மக்கள் பேரவைக்கான (Supreme People’s Assembly) இந்தத் தேர்தலில், மொத்தமுள்ள 687 தொகுதிகளையும் கிம் ஜாங் உன்னின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களே கைப்பற்றியுள்ளனர். இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு 99.99 சதவீதம் நடைபெற்றதாகவும், அதில் ஆளும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக 99.93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் வடகொரிய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கிம்முக்கு எதிராக வாக்களித்த மக்கள்: உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய விஷயம் என்னவென்றால், 1957-ம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக வாக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 0.07 சதவீத மக்கள் கிம் ஜாங் உன்னின் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வாக்குகளைச் செலுத்தியுள்ளனர். வடகொரியா போன்ற ஒரு சர்வாதிகார நாட்டில், அதிபரின் விருப்பத்திற்கு மாறாக ஒரு சிறிய சதவீத மக்கள் வாக்களித்திருப்பதை அந்த அரசே வெளிப்படையாக அறிவித்துள்ளது, இது ஒரு ‘ஜனநாயக வெளிப்படைத்தன்மை’ போன்ற பிம்பத்தை உலகிற்குக் காட்ட எடுக்கும் முயற்சி என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், வடகொரியாவின் இந்தத் தேர்தல் ஒரு பெயரளவு மட்டுமே. ஏனென்றால், ஒவ்வொரு தொகுதியிலும் ஆளும் கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஒரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டார். வாக்காளர்கள் அந்த வேட்பாளரை ஆதரிக்கவோ அல்லது நிராகரிக்கவோ மட்டுமே முடியும். ரகசியத் தேர்தல் முறை இல்லாத சூழலில், கிம் ஜாங் உன்னின் அதிகார பலத்திற்கு மத்தியில் இந்த 0.07 சதவீத எதிர்ப்பு வாக்குகளும் கூட திட்டமிட்டு அறிவிக்கப்பட்ட ஒரு தகவலாகவே பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலின் மூலம் கிம் ஜாங் உன் தனது அதிகாரத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு உறுதிப்படுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
