அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு மர்மமான பதிவு, ஈரானுடன் மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளப் பிளாட்ஃபார்மான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், டிரம்ப் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன்’ (MAGA) தொப்பி அணிந்து கொண்டு, அமெரிக்கக் கடற்படையின் உயர் அதிகாரி ஒருவருடன் கொந்தளிப்பான கடலுக்கு நடுவே ஒரு போர்க்கப்பலில் நிற்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பின்னணியில் மின்னல்களுடன் கூடிய பயங்கரமான புயல் சூழலில், அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு அருகே ஈரான் நாட்டின் தேசியக் கொடி பறக்கும் சில கப்பல்களும் அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ள டிரம்ப், அதன் மேலே “இது புயலுக்கு முந்தைய அமைதி” (It Was The Calm Before The Storm) என்று மிகக் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் ஏற்பட்டு, பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சூழலில் டிரம்ப் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ள உலக நாடுகளிடையே மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது,
அமெரிக்காவின் அமைதித் திட்டங்களுக்கு ஈரான் அளித்த பதில் “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என டிரம்ப் சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், உலகளவில் மிக முக்கியக் கடல் வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
பென்டகன் அதிகாரிகள் ஏற்கனவே ஈரானின் முக்கிய ராணுவ நிலைகள் மற்றும் அணுசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதற்கான “ஆபரேஷன் எபிக் ஃபியூரி” என்ற திட்டத்தின் அடுத்தகட்டப் பணிகளைத் தயார் நிலையில் வைத்துள்ளனர். இத்தகையச் சூழலில், டிரம்பின் இந்த “புயல்” குறித்த எச்சரிக்கை, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விரைவில் ஒரு மாபெரும் ராணுவத் தாக்குதலைத் தொடங்கப் போவதையே மறைமுகமாகக் காட்டுகிறது என்று சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தீவிரமாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
