வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற மகத்தான வெற்றிக்கு, அந்தக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

வங்கதேசத்தில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதனால் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. சுமார் 18 மாதத்துக்கு பிறகு நேற்று அங்கு தேர்தல் நடத்தப்பட்டது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரது அவாமி லீக் கட்சிக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி), அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது. வங்கதேச நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 தொகுதியில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மறைவால் மீதமுள்ள 299 தொகுதிகளில் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 50 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 1,755 வேட்பாளர்கள், 273 சுயேட்சைகள் போட்டியிட்டனர்.

நாடு முழுவதும் உள்ள 42,779 வாக்குச்சாவடிகளில் நேற்று முன் தினம் காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 8 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். 9 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டனர்.  இந்நிலையில், வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் பி.என்.பி. கட்சிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. நேரம் செல்ல செல்ல பி.என்.பி. கட்சி பல்வேறு இடங்களில் வெற்றி பெற்றது. அதன்பின் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட அதிக தொகுதிகளில் பி.என்.பி. கட்சி அமோக வெற்றி பெற்றது என உள்ளூர் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அதாவது, தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சி 151 இடங்களை கைப்பற்றி வென்றுள்ளது. இதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு 3-4 நாட்களில் முகமது யூனுஸ் தலைமையிலான ராணுவ ஆட்சி முடிவுக்கு வரும். புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பார். அதே நேரம் மாணவர் புரட்சியில் உருவான என்சிபி கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று தேர்தலில் படுதோல்வியை அடைந்துள்ளது. மேலும், தாரிக் ரஹ்மான் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) பெற்ற மகத்தான வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி வங்கதேச மக்கள் தாரிக் ரஹ்மானின் தலைமையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயக, முற்போக்கான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வங்கதேசத்திற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். இந்தியா-வங்கதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளின் பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் தாரிக் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version