சீனாவின் குயுன்சு (Quanzhou) நகரத்தில் எதிர்பாராத விதமாகப் பெய்த அதிபயங்கர மழையினால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. வெறும் ஒரு மணி நேர இடைவெளியில் சுமார் 160 மிமீ மழை கொட்டித் தீர்த்ததால், நகரின் வடிகால் அமைப்புகள் நிலைகுலைந்து போயின. இதனால் சாலைகளில் காட்டாற்று வெள்ளம் போல நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கார்கள் வெள்ள நீரில் பொம்மைகளைப் போல பல கிலோமீட்டர் தூரத்திற்கு அடித்துச் செல்லப்படும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கியுள்ள மக்களை மீட்க சீன அரசு மீட்புப் படையினரை முடுக்கிவிட்டுள்ளது. வீடுகளில் சிக்கித்தவிக்கும் முதியவர்கள் மற்றும் குழந்தைகளை படகுகள் மூலம் மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, வானளாவிய கட்டிடங்களில் இருந்து எடுக்கப்பட்ட வெள்ளப்பெருக்கின் கோரத்தாண்டவ வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த வீடியோக்களில் நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறியிருப்பதும், வாகனங்கள் வெள்ளத்தில் மிதப்பதும் பதிவாகியுள்ளது. மழையின் தீவிரம் இன்னும் குறையாததால், உயிரிழப்புகளைத் தவிர்க்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
