நேபாளத்தில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ஒலி ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்ததன் காரணமாக அந்நாட்டில் பாரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கு ஜென் சி இளைஞர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஊழல் மற்றும் பொருளாதார பிரச்னைகள் நிலவியதால் கோபமடைந்த இளைஞர்கள் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக வெடித்ததில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
ஆத்திரமடைந்த இளைஞர்கள் நேபாள நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்களின் கட்டிடங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். பதற்றமான சூழலையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து ஷர்மா ஒலி ராஜினாமா செய்ததையடுத்து, அமைச்சர்களும் பதவி விலகினர். இதனையடுத்து சுசிலா கார்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்தாண்டு மார்ச் மாதம் நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் நேபாளத்தின் பாரா மாவட்டத்தின் சிம்பாரா பகுதியில் ஜென் சி இளைஞர்கள் மற்றும் முன்னாள் பிரதமர் ஷர்மா ஒலியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீண்டும் மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரா மாவட்டத்தில் மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற அரசியல் பதற்றங்களை தூண்ட வேண்டாம் என்று நேபாள இடைக்கால அரசின் பிரதமர் சுஷிலா கார்கி கூறியுள்ளார். மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
