வீட்டில் பாகற்காய் சமைத்து விட்டால் போதும், பெருசுகள் முதல் இளசுகளின் முகம் முக்கோணத்திற்கும் சென்று விட்டு வரும். காரணம், அதன் கசப்பு சுவை. பலருக்கும் பிடிக்காத காய்கறிகளின் லிஸ்டில் முதல் இடம் பாகற்காயிற்கு தான். ஆனால், இதில் உள்ள ஆரோக்கிய நன்மைகளுக்காக, வீட்டில் உள்ளவர்களை சாப்பிட வைக்க பல போராட்டங்கள் செய்வோம்.
ஆனால் எதுவும் பலனளிக்காது. உங்க வீட்டிலும் இதே பிரச்சனையா? இனி அந்த கவலையே வேண்டாம். ஒரு முறை இங்கு கொடுக்கப்பட்டுள்ள ரெசிபியை பின்பற்றி பாகற்காய் புளி குழம்பு செய்து பாருங்க. பிடிக்கவே பிடிக்காது என்பவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
பாகற்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- பாகற்காய் – 1
- வெங்காயம் – 2
- தக்காளி – 2
- பூண்டு பல் – 15
- புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
- மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
- மல்லி பொடி – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கைப்பிடி
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- உளுந்து – அரை டீஸ்பூன்
- உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

பாகற்காய் புளி குழம்பு செய்வது எப்படி:
- பாகற்காயை தண்ணீரில் நன்கு கழுவி வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கி வைக்கவும். பின்னர், இரண்டு தக்காளியை மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அதன் பின்னர், ஒரு நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைக்கவும்.
- இப்போது அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்த பாகற்காயை சேர்த்து வதக்கவும். கூடவே உப்பு சேர்த்து வதக்கவும்.
- பாகற்காய் நிறம் மாறியதும் தனியாக ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.
- இப்போது அதே வாணலியில் கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- பின்னர், தோல் உரித்த பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் நிறம் மாறியதும் அரைத்து வைத்த தக்காளி பேஸ்டை சேர்த்து வதக்கவும். கூடவே தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும், மிளகாய் பொடி, மல்லி பொடி, மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். இப்போது புளி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானதும் எண்ணெயில் வறுத்து வைத்த பாகற்காய் மற்றும் குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்க்கவும். கூடவே உப்பு சரிபார்த்து மூடி போட்டு வேக விடவும்.
- 15 நிமிடங்களுக்கு பின்னர் மூடியை திறந்தால் சுவையான பாகற்காய் குழம்பு ரெடி.
- இந்த குழம்பை சுட சுட சாதம், இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். பாகற்காய் பிடிக்காது என்பவர்கள் கூட இந்த குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள்.
