அதிமுக தொண்டர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் தமிழக வெற்றி கழகத்தில் இன்று இணைந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அதிமுக தொண்டர்களின் வாக்குகள்தான் தவெகவின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனக் கூறியிருந்தார். மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மட்டுமின்றி அதிமுகவும் பெரிய சவால்களை சந்திக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்தவர்கள் இன்று தவெகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு தவறான கருத்துக்களை, தான் தோன்றித்தனமாக தெரிவித்துள்ளார். அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஒரு கட்சியில் உறுப்பினராக இருந்து, கொள்கை ரீதியாக தலைவராக ஏற்றுக்கொண்டு, தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்டு இருந்தால் அந்த தலைவர் மீது எவ்வளவு பற்றோடு இருக்க வேண்டும் என தெரிந்திருக்கும். ஆனால் நெல்முள் குருவி போல் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு ஓடி ஓடி சென்றார். திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வந்தார். அதிமுகவுக்கு வந்தார். வாய்ப்பு கிடைக்கவில்லை. இறுதியாக தமிழக வெற்றி கழகத்திற்கு சென்று அமைச்சராகி விட்டார்.

அதிமுக தொண்டர்கள் வாக்களித்து தான் தமிழகம் வெற்றிக்கழகம் வெற்றி பெற்றது என ஆதவ் கூச்சப்படாமல் வெட்கப்படாமல் சொல்கிறார். அதிமுக தொண்டர்கள் எந்த பிரதி பலனும் எதிர்பார்க்காமல், தான் ஏற்றுக்கொண்ட தலைமைக்காக கடுமையாக வெற்றி பெற வேண்டும் என இருக்கின்ற தொண்டர்களை சந்தர்ப்பவாதி ஆதவ் அர்ஜுனா கொச்சைப்படுத்துகிறார். இதனை, ஆதவ் அர்ஜுனா நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லையெனில் நேரடியாக அவரை எதிர்த்து போராட்டம் நடத்துவேன்” என எச்சரித்தார்.
