பாமகவின் தலைவராக அன்புமணியே தொடர்வார் என்று தெரிவித்த வழக்கறிஞர் பாலு, தேர்தல் ஆணையம் அங்கீகரித்த கடிதத்தையும் வெளியிட்டார்.

பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணி நீக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து இருந்தார். மேலும், அன்புமணி தேவைப்பட்டால் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளலாம் என்றும் கட்சியை உரிமை கோர யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ராமதாஸின் அறிவிப்பு கட்சி விதிகளுக்கு எதிரானது என்றும் பாமக கட்சியை கட்டுப்படுத்தாது என்றும் தேர்தல் ஆணையம் கொடுத்த கடிதத்தை விரைவில் உரிய நேரத்தில் வெளியிடுவோம் என அன்புமணி ஆதரவாளரும், வழக்கறிஞரமான பாலு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு, “கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியுள்ளது.

இந்த கடிதத்தின் வாயிலாக பாமக தலைவராக மருத்துவர் அன்புமணி தொடர்வார் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் வெளியிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் மூலமாக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி வரை பாமக தலைவராக அன்புமணியும், பொதுச்செயலாளராக வடிவேல் ராவணனும், பொருளாளராக திலகபாமாவும் தொடர்வார்கள். மற்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்களும் அந்த பொறுப்பில் அப்படியே தொடர்கிறார்கள் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்து கடிதம் கொடுத்துள்ளது.

சமீபகாலமாக பாமகவில் சில குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த கடிதத்தின் வாயிலாக தீர்வு கிடைத்துள்ளது. மேலும் பாமகவின் தலைமை அலுவலகம் இனி சென்னை தியாகராய நகர் திலக் தெருவில் உள்ள இந்த இடம்தான் என்பதையும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்தது.

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போட்டியிடக் கடிய வேட்பாளர்களுக்கு பாமகவின் சின்னமான மாம்பழம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியும், பாமக சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களுக்கு A பார்ம், B பார்ம் கையொப்பமிடும் அனுமதியும் அன்புமணி ராமதாஸுக்கே தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

டாக்டர் ராமதாஸ் தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டும்தான் கட்சியினுடைய கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த முடியும் மற்றவர்கள் பயன்படுத்தக் கடாது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் லட்சியங்களையும், நோக்கங்களையும் அன்புமணி தலைமையில் நிறைவேற்றுவோம். இனி வரும் காலங்களில் பாமகவில் இரண்டு அணி என்று சொல்லுவது தவறானது. இனி பாமகவில் தனித்தனி அணிகள் எதுவும் கிடையாது, ஒரே அணி தான். அது டாக்டர் அன்புமணி தலைமையிலான பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் மட்டும்தான் பாமகவை சேர்ந்தவர்கள்.

பாமகவில் ஏற்பட்ட சிறு குழப்பத்தின் காரணமாக இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இந்த கடிதத்தின் வாயிலாக அவர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். பாமகவை மேலும் வலிமையாக்க ஒதுங்கி இருப்பவர்கள், விலகி நிற்பவர்கள் டாக்டர் அன்புமணியின் தலைமையை ஏற்று இந்த பக்கம் வரவேண்டும்” என தெரிவித்தார்.

பாமக தற்போது அங்கீகாரத்தை இழந்த கட்சியாக இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட முடியுமா? என்ற கேள்விக்கு, ‘பாமக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்து தற்போது அங்கீகாரத்தை இழந்து இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் வழங்க அதிகாரம் இருக்கிறது. அந்த அடிப்படையிலே தான் சின்னத்தையும் இந்த அங்கீகார கடிதத்தையும் வழங்கி இருக்கிறார்கள்’ என்றார்.

வழக்கறிஞர் பாலுவின் அறிவிப்பை தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள பாமக தலைமை அலுவலகத்தின் முன்பு அக்கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

Share.
Leave A Reply

Exit mobile version