அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு விசாரணைக்கு வந்த போது, இ பி எஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் மற்றும் வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆகியோர் ஆஜராகினர்.

அப்போது, 2018ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை எனவும் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாகவும் தெரிவித்தார்.

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து மனுத்தாக்கல் செய்ய முடியாது எனவும் வாதிட்டார். சூர்ய மூர்த்தி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.வேல்முருகன், கட்சி விதிப்படி கட்சியின் உறுப்பினராக தொடர்வதாக கூறினார்.

கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின். விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சியின் அடிப்படை விதி. அதனை பொதுக்குழுவால் மாற்ற முடியாது எனக்கூறினார்.
எம்.ஜி.ஆர். மக்கள் கட்சியின் கூட்டணியுடன் சுயேட்சையாகவே போட்டியிட்டதாகவும் சூர்ய மூர்த்தி தரப்பில் கூறப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார் .

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version