எனது வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவியை அன்புமணி வைத்திருப்பதாக ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாமகவில் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால், கட்சி நிர்வாகிகள் பலரும் குழப்பத்தில் உள்ளனர். அன்புமணிக்கு ஆதரவானவர்களை ராமதாஸ், கட்சியில் இருந்து நீக்குவதும், ராமதாஸ்க்கு ஆதரவானவர்களை அன்புமணி கட்சியை விட்டு நீக்குவதாகவும் இருந்து வருகின்றனர். கட்சிக்கு யார் தலைவர் என்பதில் மிகப்பெரிய குழப்பம் நிலவுவதால், நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பொதுவெளியில் ஒருவரையொருவர் மாறி மாறி வசைப்பாடுதலும் நடைபெறுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், ”என் வீட்டில், நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோ ஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார்கள்? எதற்காக வைத்தார்கள்? என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருவதாக” தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னையில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் கடந்த மாதம் 12-ந்தேதி திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார்கள் என்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார்.
அதன் பேரில் கடந்த 17-ந்தேதி 8 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதனிடையே தனியார் துப்பறியும் நிறுவனத்தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது,
”எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி வைத்தது அன்புமணிதான். உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணி ராமதாஸ் தான். அன்புமணி ஒவ்வொருவரிடமும் ஒரு பொய்யைக் கூறி வருகிறார். செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகளுக்கு எதிரானது; சட்ட விரோதம்.
பொதுக்குழுவை கூட்ட வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும். நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோர முடியாது. பாமக நான் உருவாக்கி கட்சி; நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம். பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள்” எனக் கூறினார்.