சென்னையில் பாஜக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த பாஜக மண்டலத் தலைவர் மீது பாதிக்கப்பட்டவர் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த அம்சா மெய்யப்பன், பாஜக மாவட்ட கூட்டுறவுச் செயலாளராக உள்ளார். இவரை, கடந்த 25ஆம் தேதி, மாவட்ட நிர்வாகிகள் போனில் தொடர்பு கொண்டு பாலவாக்கத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு செல்லும்படி தெரிவித்துள்ளனர். அவ்வாறு வந்த அம்சாவிடம், தேர்தல் பணியில் ஈடுபட்டதற்காக ஒரு தொகை வழங்கி விட்டு, நோட்டில் கையெழுத்து போட்டுச் செல்லுமாறு கூறியுள்ளனர். எவ்வளவு தொகை என கேட்ட அம்சாவை, அங்கிருந்த பாஜக மண்டல நிர்வாகி அமர்நாத் மற்றும் அசோக்குமார் ஆகியோர் அவதூறாகப் பேசியதோடு, செருப்பால் அடித்ததாக நீலாங்கரை காவல்நிலையத்தில் அம்சா புகார் அளித்தார்.
அம்சா காவல்நிலையத்துக்கு வந்ததை அறிந்து பாஜக மாவட்ட நிர்வாகிகள் நேரில் வந்து சமாதானப்படுத்தியும் அவர் ஏற்காததால் அவர்கள் திரும்பிச் சென்றனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்களுக்கு பாஜகதான் பாதுகாப்பு என பொதுவெளியில் கூறிவிட்டு பாஜக பெண் நிர்வாகிக்கே செருப்படி விழுந்த நிகழ்வு பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
