ரூ.50ஆயிரம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ள முதலமைச்சரின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த வாரம் நாங்கள் முதலமைச்சரை சந்தித்தபோது விடுத்த கோரிக்கையின்படி விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியதை வரவேற்றார்.
முதலமைச்சரின் பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து பேசிய பி.ஆர்.பாண்டியன், சட்டமன்ற தேர்தலின் போது தவெக தரப்பில், இன்றைய முதலமைச்சர் ச.ஜோசப்விஜய், சிறுகுறு விவசாயிகளுக்கு 100% கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெரு விவசாயிகளுக்கு 50% சதவீதம் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்கிற வாக்குறுதியை தெரிவித்தார்.
இதன் மீது நம்பிக்கை வைத்துதான் விவசாயிகள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். இதனால் ஆட்சி அமைத்துள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி, நிதி சுமையை காரணம் காட்டி, விவசாயிகளுக்கு பயனளிக்காத வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டிருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.
இத்தகைய அறிவிப்புகள் கடன் சுமையில் இருக்கும் விவசாயிகளை காப்பாற்ற உதவாது. மாநில அரசுகள் தனது நிதியிலிருந்து செயல்படுத்தும் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்கள் பொருந்தாது என்பதை முதலமைச்சர் விஜய் உணர வேண்டும். கடன் வசூல் நடவடிக்கையை கடந்த காலங்களைப் பின்பற்றி நிறுத்த்தி வைப்பதோடு, நடப்பாண்டுக்காண புதிய கடன் வழங்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
மாநில அரசின் நிதி ஆதாரங்களை பெருக்கிக் கொண்டு கடன் தள்ளுபடி நடவடிக்கையை தொடர வேண்டும். அதுவரையிலும் தற்போதைய அறிவிப்பை நிறுத்தி வைத்து மறுபரிசீலினை செய்யுமாறு தமிழக முதலமைச்சரை பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
