டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ‘நீட்’ தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்தியும் மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்களுக்கு, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல் எத்திசையில் இருந்து ஒலித்தாலும், அத்திசைக்கு பெரும் நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பதே என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக ஆவேசமாக களமாடும் அத்தனை இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பிரதீப் ரங்கநாதன், கிஷோர் மற்றும் பாடகர் அறிவு உள்ளிட்ட பல பிரபலங்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்களுக்குத் தங்கள் ஆதரவைப் பதிவு செய்திருந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜும் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
