கரூரில் நடந்த சம்பவம் குறித்து வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள துரை செந்தமிழ் செல்வன் இன்று பொறுப்பேற்றார். அதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, தலைமை தாங்கினார். பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து, ஏற்கனவே விரிவாக பேசி விட்டேன். விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசினால் சரியாக இருக்கும்.

எனவே, அது சம்பந்தமான கேள்விகளை தற்போதைக்கு தவிர்க்கலாம். கரூர் விவகாரம் தொடர்பாக பல்வேறு புதிய வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எந்தெந்த வீடியோக்கள் வெளியாகிறதோ, அவை அனைத்தும் விசாரணை ஆணையத்தால் விசாரிக்கப்படும்.

தமிழக அரசு இதனை வைத்து அரசியல் செய்வதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறித்து, ஏற்கனவே அரசின் சார்பில் முழு விளக்கங்கள் அளிக்கப்பட்டு உள்ளது. நடந்த நிகழ்வுகள் குறித்து கரூரில் இருந்து நான் முழு விளக்கங்களை தெரிவித்து உள்ளேன். விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கையில் என்ன வருகிறதோ, அதனை பார்த்து அது பற்றி பேசுவோம்.

அரசின் மீது கேட்கப்படும் கேள்விகளை இன்னொரு பக்கம் செய்தியாளர்கள் கேட்பதில்லை. யாரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை, யாரிடம் கேட்கிறோம் என்று செய்தியாளர்கள் நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

ஏன் 7 மணி நேரம் தாமதமாக வந்தீர்கள்? ஏன் 500 மீட்டருக்கு முன்பாகவே வண்டிக்குள் சென்றுவிட்டீர்கள்? ஏன் 12 மணிக்கு என்று அறிவித்து விட்டு ஏழு மணிக்கு வந்தீர்கள்? டிசம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த பிரச்சாரம் ஏன் முன் கூட்டியே வந்தது? என்று நீங்கள் அவர்களிடம் கேட்டிருக்க வேண்டும்.

இருக்கின்ற சூழலை எடுத்துக் கூறுகின்ற கடமை நமக்கு உள்ளது; அந்த பொறுப்பும் நம்மிடம் உள்ளது. என்னிடம் ஒரு கேள்வி கேட்டால் எதிர் புறத்திலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா? கரூர் விவகாரம் தொடர்பாக தற்பொழுது எந்த கேள்விகளும் வேண்டாம். விசாரணை அறிக்கை வந்த பிறகு மீண்டும் பேசுவோம்” என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version