விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், வெளிச்சம் தொலைக்காட்சி தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவராகவும், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியின் தொடக்கக் கால முக்கியப் பொறுப்பாளராகவும் இருந்தவர் பனையூர் பாபு. விசிகவின் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பணியாற்றிய இவர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த ஒரு முக்கிய முகமாக அறியப்பட்டார்.  ‘வெளிச்சம்’ தொலைக்காட்சி தொடங்கப்பட்டபோது, அதன் மேலாண்மையிலும் ஒளிபரப்புச் செயல்பாடுகளிலும் இவருக்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு இருந்தது. எனினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு வழங்கப்படாத நிலையில்,  கட்சியின்  செயல்பாடுகளில் இருந்து சற்று விலகியிருந்த இவர், விசிகவிலிருந்து முழுமையாக வெளியேறி நேற்று முறைப்படி  திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் ஆயிரக்கணக்கான விசிக தொண்டர்களுடன் இணைந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விசிக பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, அண்மைக் கால அரசியல் நிகழ்வுகள் மற்றும் கட்சி தொடர்பான சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்.

“சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவும் பின்பாகவும் விசிகவின் நகர்வுகள் குறித்து தவறான கருத்துகள் கூறப்பட்டு வருகிறது. கட்சி மாறுவது என்பது எல்லா தேர்தல் முடிவுகளிலும் நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் விசிகவை பொறுத்தவரை அதுபோன்ற நிகழ்வுகள் நடக்காது. எதோ ஒரு சிலர் மட்டும் மாறுவார்கள்” என்றார்.

முரசொலியின் தவறான செய்தி

தொடர்ந்து, “நேற்று பாபு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசிகவிலிருந்து திமுகவுக்கு இணைந்ததாக பொய்யான தகவல் பரப்பப்பட்டது. திமுகவில் 1200 பேர் இணைந்துள்ளதாக ‘முரசொலி’யில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்த செய்தியில் நான்கு பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

வெளிச்சம் தொலைக்காட்சி தொடர்பாக அவர் கூறுகையில், “வெளிச்சம் தொலைக்காட்சி என்னுடையது, அதை நான் விட்டு செல்கிறேன் என்று பாபு கூறியுள்ளார். ஆனால் 2016-ஆம் ஆண்டு மருதம் என்ற நிறுவனத்தின் மூலமாக வெளிச்சம் தொடங்கப்பட்டது. அதில் அவருடைய பங்களிப்பு உள்ளதே தவிர தொலைக்காட்சி அவருடையது அல்ல. சாட்டிலைட் சேவையை நிறுவுவதற்கான நிதி லட்சக்கணக்கான விசிக தொண்டர்களின் பங்களிப்பில் திரட்டப்பட்டது. தொலைக்காட்சிக்கான எங்களது ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

திருவள்ளுவர் காவி உடை சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “என்.டி.ஏ கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும், பாஜகவுடன் எந்தவித கூட்டணியும் வைக்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறியதால்தான் அவர்களை விசிக ஆதரித்தது” என்றார்.

மேலும், “இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு விவகாரங்களில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை” என்றும் அவர் வலியுறுத்தினார்.

அண்ணாமலை தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “யூடியூபில் பார்வையாளர்கள் அதிகமாக இருப்பதால் அவர்கள் அனைவரும் நம்மை பின்தொடர்பவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அதுபோலத்தான் அண்ணாமலைக்கு சேர்ந்துள்ளதாக கூறப்படும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களும். பாஜகவின் தூண்டுதலால்தான் இந்த புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்பது போன்று தெரிகிறது” என்று விமர்சித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version