மத்திய அரசு 12 ஆண்டுகால ஆட்சிப் பயணத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில், பிரதமர் மோடி நேற்று ட்முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினார். சுமார் நான்கரை மணி நேரம் நீடித்த இந்த உயர்மட்ட கூட்டத்தில், அரசின் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 11 மாதங்கள் கழித்து நடைபெற்ற முழுமையான அமைச்சரவை கூட்டம் என்பதால், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோடி அரசு ஜூன் 9-ஆம் தேதி 12 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூழலில், அமைச்சரவை மாற்றம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “கடந்த கால நிகழ்வுகளில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையாக எதிர்காலத்தை நோக்கி செயல்பட வேண்டும்” என்று அமைச்சர்களுக்கு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு அமைச்சகமும் ‘விக்சித் பாரத் 2047’ தொலைநோக்கு திட்டத்தை மையமாக வைத்து செயல்பட வேண்டும் என்றும், சீர்திருத்தங்கள் பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நடைமுறைக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிர்வாகத்தில் வேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமை ஆகியவை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், மக்கள் நலன் மற்றும் நல்லாட்சியை அரசின் மையக் கொள்கையாக வைத்துச் செயல்படுமாறும் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார். உலக பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமின்மை, மேற்கு ஆசியப் பகுதியில் தொடரும் பதற்றம் உள்ளிட்ட சர்வதேச சூழல்களையும் கூட்டத்தில் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக அரசு மேலும் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார். அமைச்சர்களும் தங்கள் துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்துகளை முன்வைத்ததாகவும், அதற்கு பிரதமர் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
