சென்னை மாநகராட்சியின் மே மாதத்திற்கான மாதாந்திர மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தவெகவின் முதலமமைச்சர் ச.ஜோசப் விஜய், நகராட்சி நிர்வாகத்தையும் தன் வசமே வைத்துள்ளார். அதன் கீழ் வரும் சென்னை மாநகராட்சியின் மேயரான பிரியா, இதுவரை முதலமைச்சரை சந்திக்கவில்லை. காலில் முறிவு ஏற்பட்டதன் காரணமாக ஓய்வில் இருந்த அவர் நேற்றுதான் அலுவல் பணியை தொடங்கியுள்ளார்.

மேயரைப் போலவே, துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள் மற்றும் மண்டல தலைவர்களும் நிர்வாக பணியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகள் திமுக வசம்தான் உள்ளன. மற்ற 47 வார்டுகள் மட்டுமே அதிமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிடம் உள்ளன.

பொதுவாக மாதாந்திர கூட்டம் நடத்த வேண்டும் என்றால் 25 நாட்களுக்கு முன்பாகவே மண்டலக்குழு தலைவர்கள் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற வேண்டும், அதில் நிறைவேற்றப்படக்கூடிய தீர்மானங்கள் தொடர்பாக அந்தந்த நிலை குழுக்களுக்கு தீர்மானங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

மண்டல நிலைக்குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படும். அதன்பின்னர் இருவரின் ஒப்புதலுக்கு பிறகு மன்ற செயலாளர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் ஆணையர் மாமன்ற கூட்டத்தை நடத்த அனுமதி அளிப்பார்.

மேலும் மாமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு முன்பு முறைப்படி ஆணையர் 7 நாட்களுக்கு முன்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல விதிகள் உள்ளன.
இதன் காரணமாக மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் நடைபெறாது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை நெருங்கி வரும் நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் போன்றவை, மக்கள் பிரதிநிதிகளின் பங்கெடுப்பு இல்லாததால் முடங்கிக் கிடப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேர்தல் காரணமாக கடந்த 2 மாதங்களாக மாநகராட்சி வளர்ச்சி பணிகள் எதுவும் கவுன்சிலர்களால் பெரிய அளவில் முன்னெடுக்கப்படாத நிலையில், தற்போதும் அதே நிலை தொடர்வது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version