“கொள்கை ரீதியாக திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார் (SIR)” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இளைஞரணி சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் “திமுக 75 – அறிவுத்திருவிழா” நிகழ்வைத் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திமுக 75” நூலை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “ திமுகவின் 75 ஆண்டுகள் பயணத்தை நினைவுகூரும் இந்த விழாவுக்கு, “அறிவுத் திருவிழா” என்று உதயநிதி பெயர் வைத்திருக்கிறார். இதைவிடப் பொருத்தமான தலைப்பு வேறு இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த அறிவுத் திருவிழாவை இத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஆண்டுதோறும் நீங்கள் நடத்திட வேண்டும் என்று அவருக்கு நான் கோரிக்கை வைக்கிறேன்.

முழுக்க முழுக்க சாமானியர்களால் தொடங்கப்பட்டு, 1967-ல் முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கழக வரலாற்றை, இன்று வரை மீண்டும் மீண்டும் பல்வேறு கோணங்களில், பல ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சி செய்து கொண்டே இருக்கிறார்கள். ‘ஏதோ கட்சியைத் தொடங்கினோம், அடுத்த முதலமைச்சர் நான்தான்’ என்று அறிவித்தோம் என்று நாம் ஆட்சிக்கு வரவில்லை.

இப்படி, இந்தியாவே போற்றும் இயக்கமாக நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் வளர்ந்திருக்கிறது. இந்தச் சாதனைகளும் – வளர்ச்சியும்தான் பலரின் கண்களை உறுத்துகிறது. நாம் பேசும், சமூகநீதி – சுயமரியாதை – மாநில சுயாட்சி – கூட்டாட்சி – ஆகிய கருத்துகள் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவிவிட்டது! “என்னடா இவர்களைத் தமிழ்நாட்டிலேயே முடக்க நினைத்தால், இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்களே” என்று கோபப்படுகிறார்கள்.

எனவே, நான் பெருமையுடன் சொல்கிறேன். இந்த அறிவுத் திருவிழா, “திராவிடம் வெல்லும், அதைக் காலம் சொல்லும்!” என்று முழங்கும் திருவிழா.

இங்கு இருக்கும் இளைஞரணித் தம்பிமார்களைப் பார்க்கிறபோது, இது கூடிக் கலையும் கூட்டமாக இல்லாமல், காலந்தோறும் கொள்கைகளைக் கூர்தீட்டிக் கொள்ளும் கூட்டமாக இருப்பதால்தான், எத்தனை பெரிய எதிரிகள் வந்தாலும் – எத்தனை பெரிய தந்திரங்களைக் கொண்டும் நம்மை வீழ்த்த முடியவில்லை என்று உணர்த்துகிறது. கொள்கை ரீதியாகத் திமுகவை வீழ்த்த முடியாததால், தேர்தல் ஆணையம் மூலமாக, குறுக்கு வழியில் வீழ்த்த முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள், அதுதான், சார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version