அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் இது குறித்து இன்று விளக்கமளித்துள்ளார். அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்துள்ளார் செங்கோட்டையன்.

இது குறித்து தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ”அதிமுகவில் பல்வேறு சூறாவளி, சுனாமி வந்தபோதும் நிலையாக இருந்து, அதிமுகவை வளர்க்க உதவியவர் செங்கோட்டையன். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் கழகம் ஒருங்கிணைக்க வேண்டும்; ‘ஒருங்கிணைந்தால்தான் வெற்றி பெற முடியும்’ என்ற தனது மனதின் குரலாக பேசியுள்ளார். நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்.

அதிமுகவின் சக்திகள் பிரிந்து இருப்பதால் தேர்தல்களில் வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டு பல்வேறு சோதனைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாத சூழல் நீடித்து வருகிறது; அந்த நிலை மாறவேண்டும் என்றால் அதிமுக ஒருங்கிணைந்தால் மட்டும்தான் வெற்றி பெற முடியும்.

அதிமுக தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்தில் இருந்து எந்தவொரு தொண்டரையும் வெளியேற்ற முடியாது. அதிமுகவை ஒருங்கிணைக்க யார் முயற்சி செய்தாலும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பேன். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேற எங்கள் வாழ்த்துகள். மனசாட்சியுடன் பேசிய செங்கோட்டையனுக்கு பக்கபலமாக இருப்போம். செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version