பாமகவில் இருந்து நீக்கப்பட்டதாக ராமதாஸ் அறிவித்த நிலையில் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை குழு கூறிய 16 குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத நிலையில் பாமகவின் செயல் தலைவர் மற்றும் கட்சியின் அடிபப்டை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து அன்புமணியை நீக்குவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். இந்த சூழலில் பாமக தலைவர் பெயரில் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அண்மையில் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் பங்கேற்று இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் நாடகங்களை சுட்டிக்காட்டிய பிறகு அத்திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் அப்பகுதி மக்களின் கடும் எதிர்ப்பும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டால் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்காது என்ற அச்சமும் தான்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஆணையின்படி டங்ஸ்டன் சுரங்கம், கிள்ளியூர் அணுக்கனிம சுரங்கம் ஆகியவற்றை மக்களின் கருத்துகளையோ, மாநில அரசின் கருத்துகளையோ கேட்காமல் அமைத்து விட முடியும். அணுக்கனிம சுரங்கங்கள் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களை அணுக்கதிர்வீச்சு ஆபத்துக்கும், புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட நோய் பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அதேபோல், பிற சுரங்கங்கள் மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதை செய்யக்கூடாது.

எனவே, அணுக்கனிமங்கள் மற்றும் முக்கியக் கனிம சுரங்கங்களை அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டங்களை நடத்தத் தேவையில்லை; இவற்றுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை இனி மத்திய அரசே வழங்கும் என்ற ஆணையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சுரங்கங்களையும் அமைக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version