சேலத்தில் மாநகர் மாவட்ட அதிமுகவிற்காக கட்டப்பட்ட புதிய அலுவலகத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில், 150 பேர் அமரக்கூடிய அரங்கும், மாநகர மாவட்ட கழக செயலாளருக்கான தனி அறையும், தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கான அறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிரொலி ஏற்படாமல் இருப்பதற்காக அரங்கு சுவர் முழுவதும் எதிரொலி தடுப்பு வழிமுறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடம் முழுவதும் குளிரூட்டி வசதி செய்யப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரம், சேலம் மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஏகேஎஸ்எம் பாலு, சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர் ராமராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்கே செல்வராஜ், சக்திவேல், ரவிச்சந்திரன் மற்றும் பகுதி கழக, வட்டக்கழக, சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.