பதவி நீக்க மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், நாளையுடன் முடிவடைகிறது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் முக்கியமான மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, அரசியலமைப்பு மசோதா, யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா, ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
அவற்றில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா 2019-ஆனது அதன் 54வது பிரிவில் திருத்தம் கோருகிறது. அதன்படி பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்கள் போன்ற ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறை வைக்கப்பட்டால், 31-வது நாளில் அவர்கள் தன்னிச்சையாகவே பதவி நீக்கம் செய்யப்படுவர் என்ற சட்ட வடிவு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவியிலிருந்து அகற்றுவது என 130வது அரசியமைப்பு சட்டத்திருத்தம் ஒன்றிய அரசு கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது.
இதுவரை பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசமைப்பு சட்டத்திருத்தங்கள் அனைத்தும் அவர்களுக்கு அதிக அதிகாரங்களை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்கும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும் ஒன்றிய பாஜக அரசு, இதை பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அவசரகதியில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தை உடனடியாக கைவிடவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.