தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசிய பேச்சில் கவனிக்கப்பட்ட விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தமிழக வெற்றிக்கழகத்திற்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கியதன் பின் தவெகவினரின் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்தில் இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3000 நிர்வாகிகள் பங்கேற்ற அந்நிகஸ்வில் ‘தவெக’வின் தலைவர் விஜய் அவர்கள் பேசிய பேச்சின் முக்கிய அம்சங்கள் கவனம் பெற்றுள்ளன.
நிர்வாகிகளிடையே பேசிய விஜய், “நமது அரசியல் பயணத்தில் மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இப்படி சொல்வதல்ல அழுத்தம் ஏதாவது இருக்கும் என நினைக்கிறீர்களா? அழுத்தம் இருக்கிறது. ஆனால் அது மக்களுக்கு. அழுத்தமா? நமக்கா? நமக்கு அழுத்தம் கொடுத்தால் அடங்கிப்போகும் ஆட்களா நாம்?” என நேரடியாகவே விஷயத்திற்கு வந்து உரையை தொடங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “இது முக்கியமான காலகட்டம் என இதை ஏன் இவ்வளவு அழுத்தமாக சொல்கிறேன் என்றால், யாரும் வரமாட்டார்களா என நினைத்து மக்கள் ஒருவிதமான அழுத்தத்தில் இருக்கிறார்கள். மக்கள் நம்மை நம்புகிறார்கள். நம்மை நம்பும் மக்களோடு நாம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் சொன்னேன் இது முக்கியமான காலகட்டம் என்று.
கூட்டணி விவகாரங்கள் பற்றி ஒரு ஜோசியம் பேசிகிட்டு இருக்கிறார்கள். இதுவரை யாரும் கூட்டணிக்கு வரவில்லை என குறைத்து மதிப்பிடுகிறார்கள். இப்போது அல்ல 30 வருடமாக குறைத்து தான் மதிப்பிடுகிறார்கள். மக்களுக்காக உழைப்பதே பழகிப்பழகி எனது குணமாக மாறிவிட்டது. ஒன்று சொல்கிறேன், ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த பிறகு இப்போது இருப்பவர்கள் போலவோ, இதுவரை இருந்தவர்கள் போலவோ ஊழல் செய்யவே மாட்டான்; ஒரு பைசா தொடமாட்டேன் இந்த விஜய். எனக்கு அது தேவையுமில்லை. ஒரு துளி ஊழல் கூட நடக்காது; கரை படியவே விடமாட்டான். இது ஒரே நாளில் நடக்காது தான்? ஆனால் அது ஒரு PROCESS. எதற்குமே ஆசைப்படாத ஒருவன் அதிகாரத்திற்கு வரையும்போது அவன் கண் முன்னாள் ஒரு ஊழல் நடக்கும்போது அவன் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பான் என நினைக்கிறீர்களா?. இந்த தீயசக்தியாக இருக்கட்டும் அல்லது ஊழல் சக்தியாக இருக்கட்டும் 2 பேரும் தமிழ்நாட்டை ஆளவே கூடாது. எந்த சூழ்ச்சி செய்தாலும், அழுத்தம் கொடுத்தாலும் அடங்கி போவதற்கோ, அடிமையாவதற்கோ, அண்டி பிழைப்பதற்கோ நாம் அரசியலுக்கு வரவில்லை” என அழுத்தமாக கூறினார்.
நிர்வாகிகளுக்கான அறிவுரைகளாக அவர் பேசும்போது, “அண்ணா ஆரம்பித்த கட்சியும், அண்ணா பெயரில் ஆரம்பித்த கட்சியும் அண்ணாவை மறந்துவிட்டார்கள். ஆனால், நாம் அண்ணா சொன்னது போல, மக்களோடு செல்ல வேண்டும்; மக்களோடு வாழ வேண்டும்; மக்களுக்காக செயல்பட வேண்டும். ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் வாக்களிக்கும் பூத் என்பது கள்ள ஒட்டு போடும் இடம். ஆனால் நமக்கு அது ஒரு ஜனநாயக கூடம். அங்கு ஜனநாயகம் திருடப்படாமல் நம் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகளான நீங்கள் தான் கட்சியினுடைய ஆணிவேர். நீங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும்; சுதந்திரமாக செயல்பட விடணும்” (மேடையிலிருந்த ஆனந்த் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளை நோக்கி) விஜய் கூறும்போது நிர்வாகிகள் ஆர்ப்பரித்தனர்.
“நம்ம ‘தீய சக்தி’யின் தில்லுமுல்லுகள் உங்களுக்கே தெரியும். அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இன்னும் சுமார் 3 மாதங்களே தேர்தலுக்கு உள்ளது. அதற்குள் நீங்கள் ஆற்றும் களப்பணியே நமக்கு வெற்றியை கொடுக்கும். இந்த விஜய் உங்களுக்கு பிடிக்கும்னா அதை உங்கள் உழைப்பில் காட்டுங்கள். வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும்” என கூறிய விஜய், வீரமங்கை வேலுநாச்சியார் பற்றிய கதை கூறி, “வேலு நாச்சியாருக்கு இருந்த நட்பு சக்திகளை போல் நிர்வாகிகளாகிய நீங்கள் இருக்கிறீர்கள், லட்சக்கணக்கான குயிலிகள் நிறைந்த பெண்கள் படை நம்மோடு இருக்கிறது வேறென்ன வேண்டும். ‘நட்பு சக்திகள்’ இல்லாவிட்டாலும் தனித்தே வெல்வோம்” எனக்கூறி, “2026 சட்டமன்ற தேர்தலில் நாம் எல்லோரும் உண்மையாக உழைப்போம். சத்தியமாக உழைப்போம். உறுதியாக உழைப்போம். ஒற்றுமையாக உழைப்போம்” என அனைவரையும் சூளுரைக்க வைத்தார்.
நிறைவாக பேசிய அவர், “தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத வித்தியாசமான தேர்தலாக, கணிக்க முடியாத தேர்தலாக அமையப்போகும் இந்த தேர்தலில், தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தீய சக்தியிடமிருந்தும் ஊழல்வாத அடிமை சக்தியிடமிருந்தும் தமிழ்நாட்டை மீட்டுவிட்டோம் என உறுதியாக அறிவிப்போம்” என திட்டவட்டமாக கூறி, கட்சியின் சின்னமான விசிலை அறிமுகப்படுத்தி, விசிலடித்து உரையை முடித்தார்.
