தமிழக வெற்றிக்கழகத்திற்கு விசில் சின்னத்தை வழங்கியதன் பின்னணியில் ஒரு கணக்கை போட்டிருக்கிறதாம் டெல்லி. தனது எதிரிக்கு தமிழ்நாட்டில் சரிவை கொடுக்க போடப்பட்ட அந்த கணக்கு என்ன? அது நிறைவேற வேண்டுமென்றால் நடக்க வேண்டிய ஒரு முக்கிய நகர்வு என்ன? என்பதை பார்க்கலாம்.
‘ஜனநாயகன்’ படத்துக்கு தடை, கரூர் விவகாரத்தில் சிபிஐ தரும் நெருக்கடிகள் என இரு முக்கிய நிகழ்வுகள் தமிழக வெற்றிக்கழகத்தினரை சோர்வடைய செய்திருந்த நிலையில், தேர்தல் ஆணையம் ‘விசில்’ சின்னதாய் ஒதுக்கியிருப்பது அக்கட்சியினருக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்திருக்கிறது. சின்னம் கிடைத்ததையடுத்து அடுத்தடுத்த தேர்தல் வேளைகளில் மும்முரமாக இறங்கத் தொடங்கியிருக்கிறது அக்கட்சி. மத்திய பாஜகவுக்கு எதிரான மாநிலமான தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்ப்பதால் விசிக, நாம் தமிழர் போன்ற கட்சிகளுக்கு சின்னம் கொடுப்பதில் இழுத்தடித்து, நீதிமன்றம் வரை சென்று சின்னத்தை பெற வைக்கும் தேர்தல் ஆணையம் பாஜகவை கொள்கை எதிரி என எதிர்க்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கேட்ட சின்னத்தை இத்துணை சுலபமாக வழங்கியது எப்படி? என்ற கேள்வியின் பின்னணியில் இருக்கிறது இரு தகவல்கள்.
வழிக்கு கொண்டுவரப்பட்ட தவெக: பாஜகவை எதிரியாக முன்னிருந்து களமாட வந்த விஜய், கரூர் விவகாரத்திற்கு பின்பாகவே பாஜக எதிர்ப்பில் இருந்து பின்வாங்க ஆரம்பித்திருக்கிறார். கூடவே ‘ஜனநாயகன்’ படத்திற்கான தணிக்கை பிரச்சனையும் சேர்ந்துகொள்ள வசமாக சிக்கிய விஜய்யை தனது கைப்பாவையாக மாற்றியிருக்கிறது பாஜக என்கிறது டெல்லி வட்டார தகவல். அதன் வெளிப்பாடாகவே, கட்சித்தலைவர் விஜய்யாக இருக்கட்டும், அக்கட்சியின் நிர்வாகிகளாக இருக்கட்டும் அனைவரும், ஏதோ ஓரளவிற்காவது பேசி வந்த பாஜக எதிர்ப்பை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது கண்கூடாக தெரியும். சில கிடுக்குப்பிடிகளுக்கு பின்பாக ஏதோ ஒரு வகையில் க்ரீன் சிக்கினால் கிடைத்ததன் பிறகாகவே ‘தவெக’வினர் தங்களது சின்னப்பட்டியலில் முதலாவதாக கேட்ட ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது. இது திமுகவால் கிளப்படும் பொய் செய்தி என தமிழக வெற்றிக்கழகத்தினர் சொன்னாலும், அந்த புரளிக்கு வழிவகை செய்வதே அவர்களின் பாஜக எதிர்ப்பில் நேர்ந்த பின்வாங்கல் தான். ஆக, பாஜகவிடம் விஜய் சிக்கியுள்ளார் என்பது முதல் தகவலாக கூறப்படுவதை ஒட்டி, ‘அப்படியென்றால் அவர் என்.டி.ஏவில் சேரப்போகிறாரா?’ என்ற கேள்வி எழுமேயானால் அதற்கான பதிலாக தற்போதுவரை இருப்பது ‘இல்லை’ எனும் பதில் தான். ஏனெனில், அதன் மூலம் பாஜகவை போட்டு வைத்திருக்கும் வாக்குகளை பிரிக்கும் கணக்குகள் அதில் அடிபட்டுப்போகும். கூட்டணிக்கு வெளியிலிருந்து மறைமுக ஆதரவு அளிக்கவே வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.
‘விசில்’ எதிரியை பலவீனப்படுத்த ஊதப்பட்டது: இரண்டாவதாக கூறப்படும் தகவலே சற்று புதியது. அதாவது, ‘தவெக’வுக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்கி காங்கிரசுடன் துணிந்து வலுவாக கூட்டணி பேச வழிவகுத்துள்ளதாம் டெல்லி. இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் ‘தவெக’வுக்கு தயக்கத்தை கொடுத்த விஷயம் என்பது, “பொதுச்சின்னம் கொடுக்கப்படாவிட்டால் காங்கிரசின் ‘கை’ சின்னத்தில் நில்லுங்கள் என காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் அடுத்த அடியை எடுத்து வைக்க தயங்கிய ‘தவெக’ தங்களுக்கான பொதுச்சின்னமாக விசில் கிடைத்ததால் விட்ட இடத்திலிருந்து தொடங்கி காங்கிரசை தங்கள் பக்கம் கொண்டுவரப்பார்க்கும் என்கிறது அத்தகவல். அதன் ஒரு வெளிப்பாடாகவே, தவெக தரப்பிலிருந்து, “காங்கிரசில் சிலர் எங்களோடு கூட்டணி வைக்க விரும்புகின்றனர்” என வெளிப்படையாக முதல் பந்தை செங்கோட்டையன் வீசியிருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் தமிழக வெற்றிக்கழகம் நிற்காத தொகுதிகளில் சுயேட்சைகளுக்கு ‘விசில்’ சின்னத்தை ஒதுக்குவதன் மூலம் அங்கும் காங்கிரஸின் ‘கை’ சினத்திற்கான வாக்குகளை மடைமாற்ற திட்டம் தீட்டப்பட்டிருக்கிறதாம். ஆனால், இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் முதலில் தமிழக வெற்றிக்கழகத்தோடு கூட்டணி வைக்க வேண்டும். ஆனால், அது நடக்குமா? என்பதே மில்லியன் டாலர் கேள்வி.
“எது வேண்டுமானாலும் நடக்கலாம்?” என கூறப்படும் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
