2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனக்கூறி கட்சி ஆரம்பித்த விஜய் சைலண்டாக தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள 10 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக விஜய் அறிவித்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு மாநில, மாவட்ட, தொகுதி அளவிலான தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொள்ள தேர்தல் பிரச்சார குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், பார்த்திபன், ராஜ்குமார், விஜய் தாமு, செல்வம், பிச்சை ரத்தினம் கரிகாலன், செரிவு மைதீன் என்னும் நியாஸ், கேத்ரின் பாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் 234 தொகுதிகளிலும் ஆலோசனை கூட்டங்கள், பிரச்சார கூட்டங்களை நடத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்வதுடன், இவர்களுக்கு கழக தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பக்கம் ஜனநாயகம் தணிக்கை சான்றிதழ் பிரச்சனை, மறுப்பக்கம் கரூர் ௪௧ பேரின் மரணம் தொடர்பான சிபிஐ விசாரணை என விஜய்க்கு நெருக்கடிகள் உள்ள இந்த சூழலில் தேர்தல் பணிகளில் விஜய் தரப்பு தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த வாரம் தவெக கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்தார். இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருப்பதாக விஜய் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சட்டமன்ற தேர்தலை ஒட்டி இருக்கும் விஜயின் நடவடிக்கைகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version