தமிழகத்திற்கு மட்டுமில்லை, புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன், துணை நிற்பேன் என தவெக  தலைவர் விஜய் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், இதுகுறித்து தவெக தலைவர் விஜய் பேசியதாவது:

ஒன்றிய அரசுக்குதான், புதுச்சேரி, தமிழகம் வேறு வேறு. ஆனால் நமக்கு அனைத்தும் ஒன்றுதான். தமிழர்கள் வாழும் பகுதி அனைத்தும் நமக்கு ஒன்றுதான். வேறு வேறு கிடையாது. தமிழகம், புதுச்சேரி வேறு வேறாக இருந்தாலும், நாம் அனைவரும் ஒன்றுதான். சொந்தங்கள்தான்.

உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், அவர்கள் நமது உயிர்தான். நமது உறவுதான். தமிழகத்திற்கு முன்பே, புதுச்சேரியில் 1974-ல் அதிமுக ஆட்சியமைந்தது. தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்ததே புதுச்சேரிதான். தமிழகத்தை போலவே புதுச்சேரி மக்கள், என்னை 30 ஆண்டுகளாக தாங்கி பிடித்துள்ளனர்.

இந்த விஜய், தமிழகத்திற்கு மட்டும் குரல் கொடுக்க மாட்டேன். புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன். அது எனது கடமையாகும். இந்த புதுச்சேரி அரசு குறித்து பேசியே ஆக வேண்டும். இது தமிழகத்தில் இருக்கும் ஆளும் திமுக அரசு போல கிடையவே கிடையாது. ஏனெனில், வேறு கட்சியின் அரசியல் கூட்டமாகவே இருந்தாலும் புதுச்சேரி அரசு இன்று சிறப்பான பாதுகாப்பு கொடுத்துள்ளது. இந்த கூட்டத்திற்கு பாரபட்சமே புதுச்சேரி அரசு காட்டவில்லை.

அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், நம்ம புதுச்சேரி முதல்வருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியை மனப்பூர்வமாக தெரிவித்து கொள்கிறேன். இதை பார்த்தாவது, தமிழகத்தை ஆளும் திமுக கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் பாடம் கற்க மாட்டார்கள். அவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் பாடம் 100 சதவீதம் கற்று கொடுப்பார்கள்.

புதுச்சேரியில் ஆளும் கூட்டணி அரசில் பாஜக இருந்தாலும், மக்கள் கோரிக்கையை அது கண்டுகொள்ளவில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இன்னும் கொடுக்கவில்லை மத்திய பாஜக அரசு. இதுதொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவையில் 16 தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

புதுச்சேரியில் மூடப்பட்ட ஆலைகளை திறக்கவோ, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்ட அமைச்சருக்கு பதில் வேறு ஒருவருக்கு பதவி தரப்பட்டும். அவருக்கு 300 நாள்களுக்கும் மேலாகியும் இலாகா தரப்படவில்லை. இது சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதி.

திமுகவை நம்பாதீர்கள்: திமுகவை புதுச்சேரி மக்களே நம்பாதீர்கள். அவர்கள் நம்ப வைத்து ஏமாற்றி விடுவார்கள். இதுதான் திமுகவின் வேலை ஆகும்.

20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி யூனியன் பிரதேசம், மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. ஆதலால் கிடைக்க வேண்டிய நிதி, புதுச்சேரிக்கு கிடைப்பதில்லை. இந்த நிலை மாற வேண்டும் எனில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைப்பது அவசியம்.

ரேசன் கடைகள் இல்லாத மாநிலம், புதுச்சேரிதான். மற்ற மாநிலங்களை போல இங்கும் அவை கொண்டு வரப்பட வேண்டும். மீன்பிடிக்க செல்லும் காரைக்கால் மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படை, படகுகளை பறிமுதல் செய்கிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், படகுகள் விடுவிக்கப்படுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும்.

வரப்போகிற புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசி பறக்கும். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version