தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏப்ரல் 29 அன்று வெளியான வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதால், எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது குறித்து தெளிவற்ற சூழல் உருவாகியுள்ளது.
ஒருபுறம் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும் எனக் கூறுகின்றன. குறிப்பாக அக்னி நிறுவனம் 169 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும் எனக் கணித்திருக்க, சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ் 145 முதல் 160 இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவித்துள்ளது. பீப்பிள்ஸ் பல்ஸ், மேட்ரிஸ், பி-மார்க், பீப்பிள்ஸ் இன்சைட் போன்ற நிறுவனங்களும் இதே போக்கை காட்டுகின்றன.
குழப்பத்தை ஏற்படுத்திய கருத்துக்கணிப்புகள்
ஆனால், அதிமுக கூட்டணிக்குச் சாதகமான கணிப்புகளும் வெளியாகியுள்ளன. CNN News18 மற்றும் JVC நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகள் அதிமுக கூட்டணி 114 முதல் 147 இடங்கள் வரை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றன. இதேவேளை, Axis My India நிறுவனம் மட்டும் தவெக கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது. அவர்களின் கணிப்புப்படி, தவெக 98 முதல் 120 இடங்கள் வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அளவுக்கு பெரிய வேறுபாடுகள் ஏன் ஏற்படுகின்றன? இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருத்துக்கணிப்பு மேற்கொள்ளும் முறைதான் சொல்லப்படுகிறது. தொழில்முறை நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான மாதிரிகளை (samples), பகுப்பாய்வு முறை, சமூக-பொருளாதார தரவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கணிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால், சிலர் குறைந்த எண்ணிக்கையிலான மக்களிடம் கருத்து கேட்டு அல்லது ஆன்லைன் வாக்கெடுப்புகள் மூலம் பொதுவான முடிவுகளை அறிவிப்பதும் அதிகரித்துள்ளது.
முடிவை மாற்றும் Silent Voters
மேலும், நகர்ப்புறம்-கிராமப்புறம், சாதி-மத அமைப்புகள், வயது, வருமான நிலை போன்ற பல்வேறு சமூக கூறுகளை சமமாக பிரதிநிதித்துவப்படுத்தாத மாதிரிகள் கூட தவறான முடிவுகளுக்குக் காரணமாகின்றன. குறிப்பாக, தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் மற்றும் கருத்துக்கணிப்பில் பங்கேற்கும் மக்கள் இடையிலான வேறுபாடுகளும் கணிப்பின் துல்லியத்தை பாதிக்கின்றன.
இன்னொரு முக்கிய அம்சம் “Silent Voters” எனப்படும் ’அமைதியான வாக்காளர்கள்’. இவர்கள் தங்கள் அரசியல் விருப்பங்களை வெளிப்படையாக பகிராமல் இருப்பதால், கருத்துக்கணிப்புகளில் அவர்கள் கருத்து பிரதிபலிக்காமல் போகிறது. இதனால் இறுதி முடிவுகள் பல நேரங்களில் கணிப்புகளுக்கு மாறாக அமைகின்றன.
சமூக வலைத்தளங்களில் ட்ரோல்

இது ஒருபுறம் இருக்க, நேற்று வெளியான கருத்துக்கணிப்புகள் ஏற்படுத்திய குழப்பங்கள் சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகி இருக்கின்றன. ”திமுக, அதிமுக மற்றும் தவெக மட்டும்தான் வெற்றி பெறுமா…? நாங்க என்ன தக்காளி தொக்கா..?” எனக் கேட்டு, நாம் தமிழர் மற்றும் சசிகலா (அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் ) கட்சியும் தலா 110 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்” என சிலர் தங்கள் பங்குக்கு ‘நியூஸ் கார்டு’களைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தங்களுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் அமைச்சரவை பட்டியல் வரை தயாரிக்கத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கூட கருத்துக்கணிப்புகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
கேள்விக்கு உள்ளாகும் நம்பகத்தன்மை
இத்தகைய குழப்பங்கள் மற்றும் கேலி, கிண்டல்கள், சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் ட்ரோல் போன்றவற்றால், கருத்துக்கணிப்புகள் மீதான நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாகி விட்டதாக மூத்த பத்திரிகையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மூத்த பத்திரிகையாளர்கள் கருத்துப்படி, தொழில்முறை தரநிலைகளைப் பின்பற்றாத கணிப்புகள் அதிகரிப்பதே இந்த நம்பிக்கை இழப்பிற்குக் காரணம். உண்மையான தரவுகளின் மீது அமைந்த கணிப்புகள் மற்றும் “guess work” அடிப்படையிலான கணிப்புகள் இரண்டும் ஒன்றாக கலந்து வெளியாவதால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது.
முடிவாக, கருத்துக்கணிப்புகள் ஒரு சுட்டுக்காட்டாக (indicator) மட்டுமே பார்க்கப்பட வேண்டும்; இறுதி தீர்ப்பாக அல்ல. ஜனநாயகத்தில் மக்களின் வாக்குதான் இறுதி முடிவை நிர்ணயிக்கும். அதனால், மே 4 ஆம் தேதி வெளியாகும் உண்மையான தேர்தல் முடிவுகளே இந்த அனைத்து கணிப்புகளுக்கும் இறுதி தீர்ப்பாக இருக்கும்.
