ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) நட்சத்திர வீரர் விராட் கோலி ஒரு வரலாற்றுச் சாதனையுடன் தனது சீசனைத் தொடங்கியுள்ளார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில், 202 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய RCB அணிக்கு, விராட் கோலி நங்கூரம் போல் நின்று வெற்றியைத் தேடித்தந்தார். அவர் 38 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 69* ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்த அபாரமான இன்னிங்ஸின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இலக்கைத் துரத்தும்போது (Chasing) 4,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற மகத்தான உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் ‘சேஸ் மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் அவர், இந்தப் போட்டியின் மூலம் அந்தப் பட்டத்திற்கு மீண்டும் ஒருமுறை வலு சேர்த்துள்ளார். இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், அவருக்கு அடுத்தபடியாக உள்ள வீரர்களை விட ரன் வேட்டையில் மிகப்பெரிய இடைவெளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் முதல் மூன்று இடங்கள்: 

விராட் கோலி : 4000 ரன்கள்

டேவிட் வார்னர் : 3,285 ரன்கள்

ரோகித் ஷர்மா: 3,238 ரன்கள்.

விராட் கோலியின் இந்த அதிரடி ஆட்டம் மற்றும் தேவதத் படிக்கல்லின் (61 ரன்கள்) சிறப்பான பங்களிப்பால், RCB அணி 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள பெங்களூரு அணிக்கு, கோலியின் இந்த ஃபார்ம் மற்றும் சாதனை ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சோயப் மாலிக்கைப் பின்னுக்குத் தள்ளி 6-வது இடத்திற்கும் கோலி முன்னேறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version