ருமேனியாவில் நடைபெற்ற ‘சூப்பர்பெட் கிளாசிக் செஸ்’ தொடரில் இந்தியாவின் ‘பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம்’ வென்று அசத்தி உள்ளார்.
செஸ் உலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர் பிரக்ஞானந்தா. புகரெஸ்ட் நகரில் நடைபெற்று வந்த இந்த தொடரில் இந்தியாவின் சார்பில் டி.குகேஷ், பிரக்ஞானந்தா உட்பட பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா சிறப்பாக விளையாடினார். அதேப் போல மற்ற வீரர்களான அலிரேசா பிருஸ்ஜா, மாக்சிம் வச்சியர்-லாக்ரேவ் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
3 பேரும் 9 சுற்றுகள் முடிந்த பின்னர் 5.5 புள்ளிகள் எடுத்து இருந்ததால், வெற்றியாளரை தேர்வு செய்ய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற இறுதிச்சுற்றில் மாக்சிம் வச்சியர்-லக்ரேவை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.65 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. இந்த தொடரில் டி.குகேஷ் 6வது இடம்பிடித்தார்.
சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிரக்ஞானந்தா நமது நாட்டின் சொத்து என நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.