10-வது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) டி20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் நத்தத்தில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அமித் சத்விக் 20 ரன்களும், உத்திரசாமி சசிதேவ் 17 ரன்களும் சேர்த்தனர். பந்துவீச்சு தரப்பில் திண்டுக்கல் அணியின் பி. புவனேஸ்வரன் மற்றும் நிரங்கர் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
108 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய திண்டுக்கல் அணி, 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. அணியின் தொடக்க வீரர் அனுராக் ராஜேஷ் நாயர் 34 ரன்களும், விமல் குமார் 33 ரன்களுடன் (ஆட்டமிழக்காமல்) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
திருப்பூர் அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நடப்பாண்டு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
