இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். கட்டுக்கோப்பான உடல்வாகுடன் கிரிக்கெட் உலகில் அறிமுகமானவர் விராட் கோலி. இந்திய அணியின் ரன் வேட்டையன் எனவும் இவரை ரசிகர்கள் அழைப்பதுண்டு. இந்திய அணிக்காகவும், ஒரு பேட்டராகவும் இவர் படைத்த சாதனைகள் பல. இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 31 சதங்கள், 7 அரை சதங்களுடன் 9,230 ரன்களை குவித்துள்ளார்.

அதிகபட்சமாக ஒரே டெஸ்ட்டில் 254 ரன்களை குவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி இதுவரை 68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் கேப்டனாகவும் இருந்திருக்கிறார் விராட் கோலி. அதில் 40 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளை டிராவும் செய்துள்ளார். ஒரு கேப்டனாக அவரின் வெற்றி சதவீதம் 58 ஆக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டனாக அதிக வெற்றியை பெற்றவர் என்ற சதவீதத்தில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். டெஸ்ட் தொடர்களில் இந்தியாவுக்காக 7 இரட்டை சதங்கள் அடித்து அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர், கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்தவர் என பல சாதனைகள படைத்துள்ளார்.

கடந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதன்முறையக இந்தியா 0-3 என்ற கணக்கில் இழந்தது. அதேப் போல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியினால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த தொடர்களில் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் சரியாக இல்லாததால், இருவர் மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் பெர்த் போட்டியில் விராட் சதம் அடித்தாலும், சமீப காலமாக அவரது ஆட்டங்கள் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டு அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடவுள்ள நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதற்கு முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த 7-ம் தேதி அறிவித்தார். அவரை தொடர்ந்து விராட்கோலியும் ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகின. தனது ஓய்வு முடிவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் விராட் கோலி தெரிவித்ததாகவும், அதனை பரிசீலனை செய்யும்படி இந்திய வாரியம் தரப்பில் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை சொன்னால் இந்த வடிவம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வடிவம் என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவது நான் சுமந்து செல்லும் பாடங்களை கற்றுக்கொடுத்தது.

டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் ஆழமான தனிப்பட்ட ஒன்று இருக்கிறது. அமைதியான மோதல், நீண்ட நாட்கள், யாரும் பார்க்காத சிறிய தருணங்கள், ஆனால் அவை எப்போதும் உங்களுடன் இருக்கும். நான் இந்த வடிவத்தில் இருந்து விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். நான் அதற்கு என்னிடம் இருந்த அனைத்தையும் கொடுத்துள்ளேன், மேலும் நான் எதிர்பார்த்ததை விட அதிகமாக அது எனக்கு திருப்பித் தந்துள்ளது. விளையாட்டுக்காக, நான் மைதானத்தைப் பகிர்ந்து கொண்ட மக்களுக்காக, வழியில் என்னைப் பார்த்ததாக உணர வைத்த ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன். நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் எனக் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version