டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கின் அதிரடி சதத்தால் பாகிஸ்தான் அணி தோல்வியைத் தழுவியது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு தற்போது மிகவும் கடினமாகியுள்ளது. அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு கேப்டன் சல்மான் ஆகா சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்
மேலும், ரசிகர்கள் தரம் தாழ்ந்து சல்மான் ஆகாவின் குடும்பத்தினரையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். சல்மான் ஆகாவின் மனைவி சப்பா மன்சர் மற்றும் அவர்களது மகனை இணையதளத்தில் ஆபாசமான வார்த்தைகளால் ரசிகர்கள் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த சப்பா மன்சர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிஸ்தான் ரசிகர்களுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். “என்னையும் என் மகனையும் திட்டுவதால் நீங்கள் உலகக் கோப்பையை வென்றுவிட முடியாது” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
https://x.com/VidyutVyom/status/2026597011244679242?
பாகிஸ்தான் ரசிகர்கள் வீரர்களின் குடும்பத்தினரை இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பதற்குப் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சூப்பர்-8 சுற்றில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, ஒரே ஒரு புள்ளியுடன் மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அடுத்த அரையிறுதிக்குச் செல்ல பாகிஸ்தான் அணி தனது கடைசிப் போட்டியில் இலங்கையைப் பெரிய வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் மற்றும் பிற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

