கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் இணைந்து வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் திமுகவினர் அராஜகப் போக்கை கையாளுவதாகக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, கடந்த சில நாட்களாக கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்று கோவையில் முகாமிட்டு, காவல்துறையினரையே மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சியினரைத் தாக்கி அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைப்பதாக வானதி சீனிவாசன் பகிரங்கமாகத் தெரிவித்தார். “கோவை வடக்கு தொகுதியில் ஒரு வாக்கிற்கு ரூ.2,500 வரையிலும், செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் ரூ.5,000 வரையிலும் விநியோகம் செய்யப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மணல் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டே இந்த தேர்தல் வேலைகள் நடைபெறுவதாக அவர் தனது பேட்டியில் சாடினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோவையைப் பழிவாங்கும் நோக்கத்தோடு செந்தில் பாலாஜியை இங்கு அனுப்பி இத்தகைய வித்தைகளைச் செய்து வருவதாக வானதி தெரிவித்தார். போதைப்பொருள் புழக்கத்தால் இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சிதைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு தேர்தலைச் சந்திக்க திமுக முயல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும், கோவை மக்கள் மிகவும் தெளிவானவர்கள் என்றும், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
