திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு குட்கா பொருட்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் ஆய்வாளர் தலைமையில் மீஞ்சூர்–வண்டலூர் வெளிவட்டச் சாலை, ஜெயின் டெம்பிள் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை மடக்கி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்ததில், இரு வாகனங்களிலும் சாக்கு மூட்டைகளில் 2882 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது மறைத்து வைக்கப்பட்டிருந்த கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, வாகனங்களுடன் குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார் கடத்தலில் ஈடுபட்ட கோபால், முத்துராஜ், ராமச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திரா மாநிலத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு குட்காப் பொருட்களை கடத்த முயன்றது தெரியவந்தது.
