அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பட்டியலை கொடுத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில், ஐஜேகே (IJK) கட்சி நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் இன்று அவரை நேரில் சந்தித்துப் பேசினர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமை சக்தியாக அதிமுக விளங்கி வருவதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆலோசனையின் போது, ஐஜேகே சார்பில் போட்டியிட விரும்பும் 7 தொகுதிகள் அடங்கிய பட்டியலை எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கியதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்தப் பட்டியலைப் பெற்றுக்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர், கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகு, தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து இறுதி முடிவு எடுத்து உறுதி அளிப்பதாகத் தெரிவித்ததாக ரவி பச்சமுத்து கூறினார். கூட்டணி குறித்த முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமுகமாக அமைந்ததாக அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஐஜேகே கட்சி தனது தனிச்சின்னத்திலேயே போட்டியிடும் என்பதை அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். கடந்த காலத் தேர்தல்களைப் போலன்றி, இம்முறை தங்களது கட்சியின் அடையாளத்தைப் பலப்படுத்தும் வகையில் தனிச்சின்னத்தில் களம் காண முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version