முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில அளவிலான கபடிப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.

தேனி மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் இப்போட்டியை, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்து, கபடி வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மூன்று நாள் போட்டி – பல மாவட்ட அணிகள் பங்கேற்பு:

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், தூத்துக்குடி, அரக்கோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கபடி அணிகள் பங்கேற்றுள்ளன. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவினருக்கும் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படுகின்றன.

ஆரம்ப சுற்றில் பரபரப்பான ஆட்டங்கள்:

மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் போட்டியில், சேலம் அணி 33-19 என்ற புள்ளி கணக்கில் மதுரை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதேபோல், ஆடவர் பிரிவில் கோட்டூர் அணி, தேனி விளையாட்டு மேம்பாட்டு அணியை 21-19 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

பரிசு விவரங்கள்:

இப்போட்டியில் முதல் பரிசை வெல்லும் ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், கோப்பையும் வழங்கப்படும். இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 75 ஆயிரம் ரூபாயும், கோப்பையும், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும், கோப்பையும் வழங்கப்படும். நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பாக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

Share.
Leave A Reply

Exit mobile version