தமிழக அரசியலில் நிலவி வந்த பரபரப்பு தற்போது உச்சகட்ட குழப்பத்தை எட்டியுள்ளது. ஆளுநர் மாளிகையில் சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற ஆலோசனையின் முடிவில், விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் தரப்பில் சில முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக உடனடியாகப் பதவியேற்க ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
குறிப்பாக, ஆதரவு அளிக்கும் கட்சிகளின் கடிதங்களில் உள்ள சட்ட நுணுக்கங்கள் மற்றும் பெரும்பான்மையை நிரூபிக்கும் விதம் குறித்து ஆளுநர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதிலளித்த விஜய், “சட்டமன்றத்தில் எனது பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிப்பேன்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ள போதிலும், ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஆளுநர் மாளிகையிலிருந்து விஜய் வெளியேறிய பின்னரும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதம் இன்னும் கைக்கு வந்து சேராதது தவெக முகாமில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்து வரும் நிலையில், ஆளுநர் தரப்பில் ஏன் இந்தத் தாமதம் என்பது குறித்துப் பல்வேறு அரசியல் யூகங்கள் எழுந்துள்ளன.
ஒருபுறம் பதவியேற்பு விழா குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தகவல்கள் பரவினாலும், மறுபுறம் ஆளுநரின் மௌனம் அரசியல் சாசன ரீதியான சிக்கல்களை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது சட்டக் குழுவுடன் விஜய் பனையூர் அலுவலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
விஜய்க்கு ஆளுநர் கேள்வி..!
1. பெரும்பான்மை கிடைத்துவிடும் என்ற யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா..?
2. 113 MLA க்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா..?
3. வேறு எந்த கட்சி தவெக-வை ஆதரிக்கும்
4. ஆட்சி அமைத்த பின் பெரும்பான்மை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்..? என்பது உள்ளிட்ட பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை ஆளுநர் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
