வங்கக்கடலில் இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால் குமரிக்கடல் பகுதியில் நிலவியது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில், மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 22ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில், சூறாவளிக்காற்று வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் 17 செ.மீ. மழையும், இதற்கு அடுத்தபடியாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
