தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”என்னுடைய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என நச்சரித்து இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்க வைத்துள்ளார்கள். எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். பிறப்பைக் கொண்டு புறக்கணிக்கக் கூடாது என்கிற நோக்கத்தோடு திறமை பெற்றிருக்கும் அனைவருக்கும் வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது இந்த அரசியல் இயக்கத்தின் குறிக்கோளாகும். பிறப்பின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையை அறவே மறந்து, பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வாய்ப்பை சமுதாயம் பெற வேண்டும். அப்பொழுதுதான் அந்த சமுதாயம் அமைதியாகவும் முன்னேற்றமும் கொண்டதாகவும் இருக்கும்.
அறிஞர் அண்ணா என்னை அரசியலுக்கு அழைத்தார்; எம்ஜிஆர் என்னை அரசியலில் வளர்த்தார். அவர்கள் கற்றுத்தந்த பாடங்கள் அடிப்படையில் எல்லோரும் இன்புற்று வாழ்வதற்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டிய வரலாற்று கட்டாயம் இன்று ஏற்பட்டிருக்கிறது. அந்த கடமையை செய்வதற்கு தான் அரசியலே தவிர வேறல்ல. தேர்தலில் நின்று வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது என்னுடைய நோக்கம் அல்ல. இந்த இயக்கம் தேர்தலில் ஈடுபடாது. இந்த இயக்கம் நல்ல சமுதாயத்தை உருவாக்க ஒரு அரசியல் நெடும் பயணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு தரும். எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக கழகம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
அண்ணாவால் அரசியலுக்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் எம்ஜிஆர் உடன் தீவிர அரசியல் களத்தில் பணியாற்றினார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெ.விற்கும், பின்னர் விஜயகாந்திற்கும் பக்க பலமாக இருந்தார். கடைசியாக ஓபிஎஸ் தொண்டர்கள் மீட்பு இயக்கத்தில் முக்கிய ஆலோசகராக இருந்த நிலையில், தற்போது புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்
யார் இந்த பண்ருட்டி ராமச்சந்திரன்? தமிழகத்தின் அரசியல்வாதியான இவருக்கு தற்போது 88 வயது ஆகிறது. முதல்முறையாக 1967ல் திமுக சார்பில் பண்ருட்டியில் வென்றார். பின்னர் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகளில் 4 முறை அமைச்சராக இருந்தவர், 2005-2013 வரை தேமுதிக அவை தலைவராகவும் பதவி வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக ஓபிஎஸுக்கு ஆதரவளித்து வந்த அவர் தற்போது புதிய கட்சிக்கு நகர்ந்துள்ளார்.
