தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் ஸ்டண்ட் நடிகரான முத்துக்காளையின் மனைவி மாலதி (வயது 47), சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9 மணியளவில் காலமானார்.
மாலதி அவர்களுக்குத் தலையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக, கடந்த 19 நாட்களாகச் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தன்னிடம் இருந்த ஒட்டுமொத்தப் பணத்தையும் மனைவியின் சிகிச்சைக்காகச் செலவழித்த நடிகர் முத்துக்காளை, மேற்கொண்டு மருத்துவச் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்தார்.
இதையடுத்து, தனது மனைவியைக் காப்பாற்ற நிதியுதவி செய்யுமாறு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தத் தகவல் அறிந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் நேரில் சென்று மருத்துவ உதவிகளை மேற்கொண்டனர். எனினும், மருத்துவர்களின் தீவிரக் கண்காணிப்பில் இருந்த மாலதி, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.
கடந்த ஆண்டுதான் தனது மகன் பள்ளிப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷின் உதவியுடன் கல்லூரியில் சேர்ந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார் முத்துக்காளை. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் மனைவியின் இந்தத் திடீர் மரணம் அவரை நிலைகுலையச் செய்துள்ளது.
மாலதியின் உடல் அஞ்சலிக்குப் பிறகு, இறுதிச் சடங்கிற்காக அவரது சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, சங்கம்பட்டி (திருக்கோதையாபுரம்) கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. மாலதியின் இறுதிச் சடங்குகள் இன்று இரவு அவரது சொந்த ஊரிலேயே நடைபெறவுள்ளன.
