சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, திருமண தகராறு தொடர்பாக ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.
நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், விவாகரத்து கோரி ரவி மோகன் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்து, இணையத்தில் இருவர் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், ரவி மோகனை பிரிவதாக கெனிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து, மே 16ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன், தனது குழந்தைகளை பார்க்க விடுவதில்லை; தன்னை புரிந்து கொண்டு வந்த பெண்ணையும் துரத்திவிட்டனர்; தனது குழந்தைகளுக்காக அமைதி காக்கிறேன், என கூறியிருந்தார். விவாகரத்து வழக்கு தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என கடந்த ஆண்டு மே மாதம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, ரவி மோகன் ஊடங்களை சந்தித்ததாக, ஆர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனு கடந்த மாதம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தனது செயலுக்கு மன்னிப்புக் கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம் ஆர்த்தி தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்திருந்தது. இந்தநிலையில், உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ரவி மோகன் மன்னிப்பு கேட்டு பத்திரிகையில் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னை உயர் நீதிமன்றம் 2025 மே மாதம் பிறப்பித்த உத்தரவை மீறி, கடந்த மே 16ம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக திருமணத் தகராறு தொடர்பான கருத்துகளை தெரிவித்தற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கோருவதாகவும், தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அல்லது பாதிக்கப்பட்ட அனைவரிடமும் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். பத்திரிகையில் பொது அறிவிப்பு வெளியிட்டது குறித்த ஆவணமும் ரவி மோகன் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
