கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழக அரசின் வாதம்:

தமிழக அரசு தரப்பில், “ஜெயராம் தொடர்பான எந்தெந்த வழக்குகள் என்பதை நாங்கள் கூற விரும்பவில்லை. ஆனால், பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரணையை எடுத்துக்கொண்டு, சில உத்தரவுகளைப் பிறப்பித்து, நாங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது,” எனக் கூறி அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

கூடுதல் டிஜிபி ஜெயராம், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அகில இந்திய சேவை விதிகள் அடிப்படையிலான விசாரணையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டது.

ஜெயராம் தரப்பு வாதம்:

ஜெயராம் தரப்பில், “பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இது முறையான நடவடிக்கை அல்ல,” என வாதிடப்பட்டது.

இதையும் படிக்க: ‘தமிழிலும்’ குடமுழுக்கு என்பது அவமானம்!… தமிழக அரசு மீது சீமான் பாய்ச்சல்..

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு:

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வேறு அமர்வு அமைக்க அறிவுறுத்த உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜெயராம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க வேறு அமர்வு அமைக்க சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, ஜெயராம் தொடர்பான வழக்குகளின் விசாரணையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version