மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கில், வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி வருமான வரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், ரூ.13 கோடி செலுத்தக் கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபாவுக்கு வருமான வரித்துறை தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை எதிர்த்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஜெயலலிதாவின் இன்னொரு வாரியாக கூறப்படும் தீபக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தீபா தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது வருமான வரி பாக்கி முதலில் ரூ.36 கோடி என்றும், பின் ரூ.13 கோடி செலுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சரியான தொகையை தெரிவித்தால் இந்த நோட்டீசை செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்ட நீதிமன்றம் பதில் மனு தாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. அப்போது வருமான வரி பாக்கி தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் இன்னும் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என முறையிடப்பட்டது. இதையடுத்து வரி பாக்கி தொடர்பாக இரண்டு வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை வரி பாக்கி வசூல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
