தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது, அம்மா உணவகம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் குறித்து கடும் வாதப்பிரதிவாதங்கள் வெடித்தன. அதிமுக சார்பில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, முந்தைய ஆட்சிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“மாற்றம், மாற்றம் என்று சொன்னீர்களே… அது வெறும் பெயர் மாற்றமா?” என கேள்வி எழுப்பிய அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய தாலிக்கு தங்கம் திட்டம் தற்போது ‘அண்ணன் சீர்’ திட்டமாகவும், பசுமை வீடு திட்டம் ‘வெற்றி வீடு’ திட்டமாகவும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி மற்றும் மகளிருக்கான விலையில்லா ஆடுகள் திட்டங்களும் வேறு பெயர்களில் தொடரப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த ஆதவ் அர்ஜுனா, முந்தைய திமுக மற்றும் அதிமுக ஆட்சிகளில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தற்போதைய தவெக ஆட்சியில் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். அம்மா உணவகம் சரியாக செயல்படாத நிலையில் அதன் பெயரை மாற்றாமல் நிதி ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து நடத்தப்படுவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அதில் குறைபாடுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டாலும் திமுக ஆட்சியிலும் அதே பணியாளர்களுடன் நகராட்சி நிதியில் தொடர்ந்து இயங்கியதாகவும், தான் அந்தத் துறையை கவனித்ததாகவும் விளக்கினார். இதற்கு எதிர்வினையாற்றிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக ஆட்சியில் அம்மா உணவகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை என நேருவின் கருத்தை சுட்டிக்காட்டினார்.

அதிமுக ஆட்சியில் 2018-ல் ‘அண்ணன்’ இருந்தபோது ரூ.100 கோடி தனியாக ஒதுக்கப்பட்டு மாநகராட்சிக்கு வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த இடத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியின் பெயரை தெளிவாக சொல்லுமாறு கூச்சலிட்டனர். ஆனால் வேலுமணி அதைத் தவிர்த்து ‘அண்ணன்’ என்றே குறிப்பிட்டு கடந்து சென்றார்.

ஜெயலலிதாவால் 2013-ல் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், குறைந்த விலையில் இட்லி, சாதம் போன்ற உணவுகளை வழங்கும் பிரபலமான திட்டமாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த சம்பவ வீடியோ சமூக ஊடகங்களில் பரவி, அதிமுக உள்கட்சி பதற்றங்களை மீண்டும் வெளிச்சம் போட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version