திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையின் முதல் நாள், மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் காலை முதல் இரவு வரை சுமார் 11 மணி நேரம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று திருப்புவனம் காவல் நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகையில் காலை 10:45 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார். இரவு 10 மணி வரை நீடித்த இந்த விசாரணையில், பல்வேறு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

விசாரணை ஒரு பார்வை:

காவல்துறை அதிகாரிகள்: முதலில், திருப்புவனம் ADSP சுகுமாறன் மற்றும் திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நகை காணாமல் போனது தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட CSR, FIR ஆவணங்கள் மற்றும் காவல் நிலைய, கோவில் CCTV DVR பதிவுகள் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டன.

முக்கிய சாட்சிகள்: தனிப்படை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியது தொடர்பான வீடியோவைப் பதிவுசெய்த கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலக உதவியாளர் பெரியசாமி, உதவி ஆணையரின் ஓட்டுநர் கார்த்திக்வேல் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

அஜித்குமாருடன் இருந்தவர்கள்: அஜித்குமாருடன் தனிப்படை காவல்துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோவில் பாதுகாவலர்களான பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், மற்றும் கோவில் பாதுகாப்பு அலுவலரும் CCTV கண்காணிப்பாளருமான சீனிவாசன் ஆகியோரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

வழக்கறிஞர் தரப்பு: அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர்களில் ஒருவரான கணேஷ்குமார் அவர்களும் விசாரிக்கப்பட்டார்.

விசாரணையின்போது, கோவில் உதவி ஆணையர் அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் அஜித்குமாரை அழைத்து வந்தபோது நடைபெற்ற விசாரணைகள் குறித்தும், அஜித்குமார் புகார்தாரர் நிகிதா என்பவரிடம் கார் சாவியைப் பெற்றது மற்றும் திரும்ப ஒப்படைத்தது தொடர்பான சாட்சியங்களையும் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கமாக அளித்தனர்.

நாளை (ஜூலை 4) இரண்டாவது நாளாகவும் மாவட்ட நீதிபதி சாட்சிகளிடம் விசாரணையைத் தொடர்வார். இந்த வழக்கு விசாரணையின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version