ஆலங்குளம் அருகே நெட்டூரில் திருமண விருந்தில் புகுந்து 6 பேரை வெட்டிய சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களைக் காவல்துறை வெளியிட மறுப்பது ஏன் என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழக (தமமுக) தலைவர் ஜான் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காவல்துறையின் அலட்சியமே காரணம்
நெட்டூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாகவே தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. இதுகுறித்து உள்ளூர் மக்கள் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எந்தவொரு எளிய நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போதைய கொடூரச் சம்பவம் நடப்பதற்கு முன்பாகவும்கூட ஊர்மக்கள் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் புகாரைப் பெற மறுத்துள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முழு முதற்காரணம் காவல்துறையின் அஜாக்கிரதை தான். முன்பே எச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது. காவல்துறையினர் எதிர்த்தரப்பிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஒருதலைப்பட்சமாகச் சமாதானம் பேசியதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகளா?
இச்சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், கைதானவர்களின் பெயர், புகைப்படம் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையும் காவல்துறை முறைப்படி வெளியிடவில்லை. விவரங்களை ஏன் மறைக்கிறார்கள்? கைதானவர்கள் உண்மையான குற்றவாளிகளா அல்லது அப்பாவிகளா என்ற பலத்த சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
நெட்டூரில் அன்றைய தினம் காலையிலிருந்தே தகராறு நீடித்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தும் காவல்துறை ஏன் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை? சாதி வன்மத்தோடு மக்கள் மீது இந்த கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
போராட்டம் வெடிக்கும்
கடந்த 3 மாதங்களாகப் புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, தற்போதைய அரசுக்குக் கெட்டப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு சில அதிகாரிகள் திட்டமிட்டுச் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இனிமேலாவது இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கப் போலிஸ் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
தற்போது பொதுமக்களை நேரில் அழைத்துச் சென்று, உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மீண்டும் புகார் அளிக்க உள்ளோம். இந்த புகாரின் மீதும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என ஜான் பாண்டியன் எச்சரித்துள்ளார்.
