தமிழக அரசியலில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, மீண்டும் நேரடி அரசியலில் இறங்கியுள்ளார். இதற்காக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகத் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று ‘அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்’ (அஇபுதமமுக) என்ற கட்சியில் சசிகலா தன்னை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டார். நீண்ட நாட்களாக அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அவர், தற்போது தனது ஆதரவாளர் மற்றும் தொண்டர் ஒருவர் தொடங்கியுள்ள கட்சியில் இணைந்து புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

கட்சியில் இணைந்த கையோடு, அக்கட்சிக்கான புதிய கொடியையும், ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் சசிகலா அறிமுகம் செய்து வைத்தார். “இது தொண்டர்களுக்கான கட்சி, மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் நோக்கம்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல்களுக்கு மத்தியில், சசிகலாவின் இந்த அதிரடி முடிவு அவரது ஆதரவாளர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி போட்டியிடும் என்றும்  அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நாங்கள் தனி மரமாக வரவில்லை தோப்பாக தான் வந்திருக்கிறோம் கூட்டணி வைத்து தேர்தல் சந்திப்போம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசியலில் தற்போது திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் எனப் பலமுனைப் போட்டி நிலவி வரும் சூழலில், சசிகலாவின் இந்த புதிய அரசியல் பிரவேசம் மற்றும் சின்னம் அறிமுகம் தேர்தல் களத்தில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் விமர்சகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version