மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்பட்டு வந்தது. இது கொரோனா காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் அப்படியே கைவிடப்பட்டது.

இதன் பிறகு 2021-ல் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் மீண்டும் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி (டேப்) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக 2025 – 2026 தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, “முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை ஹெச்.பி., டெல், ஏசர் ஆகிய 3 நிறுவனங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்தது.

இந்நிலையில், திருச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி துவக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இணைந்து மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவார்கள்” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version